விளக்கேத்து விளக்கேத்து வெள்ளிக்கிழமை என்பது போல் கொடியேத்து கொடியேத்து சுதந்திர தினம் என்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதுவும் வீடுதோறும் கொடியேத்தவும், மூன்றுநாள் கொடியேத்தவும் வேண்டும் என்கிறார்.
நாடு பிரிட்டிஷ்காரர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது அவர்களை எதிர்த்து நடந்த விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொள்ளாதது மட்டுமல்ல, கலந்துகொண்டவர்களை காட்டிக்கொடுத்துதுரோகம் இழைத்தவர்கள் இவரது கட்சியின் மூதாதையர்கள். அது மட்டுமின்றி அதற்காக அவர்களிடமிருந்து பென்ஷன் வாங்கியவர்கள். ஆனால் இப்போது தேசபக்தி பொங்கியெழக் காரணம் வரப்போகிற சில மாநில சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் தான்.
இவர்கள் தேசபக்தி என்கிற பெயரில் தேசிய வெறியை கிளப்பிவிட்டு அதன்மூலம் தேர்தல் ஆதாயம் பெற நினைப்பவர்கள். குறிப்பாக இந்துத்துவாெவறியை, தேசப்பற்று என்கிற பெயரில் தூண்டுபவர்கள்.
தங்களது ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க அருகதை இல்லாதவர்கள், நாட்டுப்பற்று என்கிற பெயரில் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மதம் எனப் பலவும் கூறி பாசாங்கு செய்வார்கள். இது தான் உலகம் முழுவதும் பாசிசவாதிகள் செய்தது. அதைத்தான் இங்கு பாஜகவும் அதன் ஆட்சியும் செய்கிறது. அதன் வெளிப்பாடு தான் சமீப கால கொடியேற்றும் உத்தி
நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து சுதந்திர தினம் கொடியேற்றிக்கொண்டாடப்பட்டுத்தான் வருகிறது. ஆனால் இவர்கள் மட்டுமே அதை பற்றிலிருந்து வெறியாக மாற்றுகிறார்கள். அதுவும் அண்டை நாடுகளுடன் சண்டை செய்யத் தயார் என்று அறிவித்து போர்ப் பதற்றமனநிலையை மக்களுக்கு ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் லாபம் தேடுகிறார்கள். அதனால்தான் மூன்று நாள் கொடியேற்றச் சொல்கிறார் மோடி.
ஆனால் நாட்டில் குறிப்பாக மணிப்பூர், அரியானாவில் பழங்குடி , மூஸ்லீம் மக்களை தாக்கி அழிக்கும் கொலைபாதகச் செயல்களை ஒடுக்குவதற்கு, மக்களைக் காப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றம் தலையிட்ட பின்னரே பெயரளவிலான நடவடிக்கை எடுத்தனர். ஆயினும் கலவரக்காரர்கள், வன்முறையாளர்கள் சுதந்திரமாகவே திரிகிறார்கள்.
மணிப்பூரில் இளம்பெண்களை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்று பாலியல் வன் கொடுமை செய்தவர்களை ஒரு பிரதமராக - அவரது வார்த்தையிலேயே கூறுவதென்றால் - சேவகராக - கண்டிக்கக் கூட இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் மொழி சொல்ல அங்கு மூன்று மாதமாகியும் செல்லவில்லை. இது தான் பாஜக-ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் அழித்தொழிப்பு தத்துவமும் நடைமுறையும். இவை முசோலினி, ஹிட்லரிடம் இவர்கள் பெற்றுக்கொண்டவை. அவர்களது இந்தியப் பாணி தான் இவர்களது ஆட்சியில் நடக்கும் கலவரங்கள். அதற்கு ஆதரவாக இருப்பதுதான் இவரது ஆட்சி. இந்தக் கொடூரச் செயல் கண்டு உலகமே அதிர்ச்சியடைந்திருக்கிறது. ஆனாலும் இவர்கள் இனவெறி இஸ்ரேலிய ஆட்சியாளர்களைப் போலவே இங்கே நடந்துகொள்கிறார்கள்.
நாட்டில் நடைபெறும் அணிவகுப்புகளில் தேசியக்கொடி ஏந்திச்செல்வது பெருமை. ஆனால் வெளிநாடுகளில் இந்தியாவின் தேசியக்கொடியை உயர்த்தி நாட்டுக்கு பெருமை சேர்ப்பவர்கள் நம் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள். அத்தகைய பெருமைக்கும் புகழுக்கும் பாராட்டுக்கும் உரிய மல்யுத்தவீராங்கனைகள் தங்களுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஜண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நெடிய போராட்டத்தில் - நீதிமன்றம் செல்வது உள்பட - ஈடுபடும் நிலையல்லவா ஏற்பட்டது. ஆனாலும் பிரிஜ்பூஜண் பதவி நீக்கப்படவில்லை. தற்போது நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர், கெட்ட நோக்கம் இன்றி கட்டிப் பிடிப்பது குற்றம் ஆகாது என்று வாதாடுகிறார். ஆனால் மல்யுத்தவீராங்கனைகளின் போராட்டத்தினால் உலக மல்யுத்த அமைப்பும் வெளிநாடுகளும் கூட கண்டனம் தெரிவித்தனவே. அப்போது நமது நாட்டின் மானம் காற்றில் பறந்ததே!
பதக்கங்கள் பெற்றுவந்த போது நேரில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி, போராடும் எங்களைச் சந்தித்து எங்களது மனதின் குரல்களை கேட்கவில்லையே என்று புலம்பச் செய்தவர் தானே மோடி. இதேபோல் தான் மணிப்பூர் பெண்களின் துயரத்தைப் போக்க ஆணையிடவும் அங்கு சென்று ஆறுதல் சொல்லவும் மோடிக்கு மனமில்லையே. இவை எல்லாம் நமது நாட்டின் புகழுக்கு களங்கம் இல்லையா? இதனால், நமது பெருமை- மானம் - காற்றில் பறக்கவில்லையா?
இப்போது சுதந்திர தினத்தை ஒட்டி வீடுகளில் கொடியேற்றச் சொல்கிற பிரதமரே, உங்களது கட்சி, பரிவார அமைப்புகளின் அலுவலகங்களில், தலைவர்களின், தொண்டர்களின் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றச் சொல்லுங்கள். ஏனென்றால் உங்களது கொடி காவிக்கொடி. நீங்கள், உங்கள் வழிகாட்டு அமைப்பு, பின் தொடரும் அமைப்புகள் தேசியக்கொடியை-அரசியல் அமைப்புச் சட்டத்தை - மதிப்பதில்லையே!
உங்களுக்கு தேசியக் கொடியின் மூவர்ணத்தைவிட காவி தான் எனக்குப் பிடிச்ச கலரு என்று சொல்லித் தானே புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அந்த வண்ணத்தைத் தீட்டியிருக்கிறீர்கள்.?
விடுதலைப் போராட்டக்காலத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின், பிரிட்டிஷாரின் யூனியன் ஜாக்கொடியை இறக்கிவிட்டு, தேசியக்கொடியை ஏற்றியவர்களை காட்டிக்கொடுத்தவர் தானே உங்கள் தலைவர் வாஜ்பாய். இதையெல்லாம் மறைத்திடத்தானே இப்போது நாட்டு மக்களை வீடுகளில் கொடியேத்தச் சொல்கிறீர்கள்.
இப்போது நாடுமுழுவதும் மணிப்பூர் துயரத்தையும், அரியானா அவலத்தையும் பேசிக்கொண்டிருக்கிறது. நீங்கள் அந்த துயரத்தைப் போக்க நடவடிக்கை எடுக்கக்கூடாது என முடிவு செய்துவிட்டீர்கள். ஏனெனில் அங்கு கலவரக்காரர்களும் வன்முறையாளர்களும் என்ன சொல்கிறார்களோ, அந்த மாநில முதல்வர் பைரேன் சிங் என்ன சொல்கிறாரோ, அதைத்தானே உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், நீங்களும் சொல்கிறீர்கள். இதை எல்லாம் திசை திருப்பத்தானே கொடியேத்து கொடியேத்து என்கிறீர்கள்.
விரைவில் அமைதி திரும்பும் என்கிறீர்கள்.அதுஎன்ன, மயான அமைதியா? உங்கள் இதயம் துடிப்பது ஏழை எளிய, நாட்டு மக்களுக்காக அல்ல. அம்பானி, அதானிகளுக்காகவே. அவர்களுக்கு நாட்டின் வளங்களைத் தாரைவார்க்க நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு இடையூறு என்று கருதினால் கலவரம் செய்யச் செய்வீர்! அதை காணாமல் கண்ணை மூடிக்கொள்வீர்! கேளாமல் காதைப் பொத்திக்கொள்வீர்! பேசாமல் வாயை மூடிக்கொள்வீர்! மக்கள் கதறி அழுதால் காப்பாற்றாமல் காவல்துறையின் கையைக் கட்டுவீர்! எதிர்த்துக்குரல் எழுப்பினால் திசைதிருப்புவீர்.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மக்கள் மருந்து கிடைக்காமல், ஆக்சிஜன் கிடைக்காமல் தவித்தபோது கையைத் தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் என்று கூறி திசை திருப்பினீர்களே, அதுபோல இப்போதும் சொல்கிறீர்கள்.
உங்களை நன்றாகப் புரிந்துகொண்ட நாட்டு மக்கள் கட்டாயம் பதில் தருவார்கள். அப்போது நீங்கள் புலம்பலாம். அல்லது வெறிகொண்டு பாயலாம். ஆனால் நாட்டு மக்கள் தங்கள் தேசத்தை நிச்சயம் பாதுகாப்பார்கள்.அவர்கள் தேசியக்கொடியேற்றித்தான் தங்கள் தேசப்பற்றைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இல்லை.
கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர்- எங்கும், காணரும் வீரர் பெருந்திரள் கூட்டம், நம்பர்க்குரியர் அவ்வீரர் தங்கள் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர் என்றார் மகாகவி பாரதியார். இந்தியத் தாயின் மணிக்கொடி பட்டொளி வீசிப் பறக்கும். அந்த மணிக்கொடி நாட்டு மக்களைக் காக்கும்.